ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறைப் போராட்டத்தில் சுமார் 731 வங்கிகளும், 140 அரசு அலுவலகங்களும் எரிக்கப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் உள்துறை அமைச்சர் அப்துல்ரேசா ரஹ்மானி கூறும்போது, “ஈரானில் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட வன்முறைப் போராட்டங்களில் சுமார் 731 வங்கிகளும், 140 அரசு அலுவலகங்களும் எரிக்கப்பட்டன. 70 பெற்றோல் நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.
சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நவம்பர் 15ஆம் திகதி முதல் நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்தனர்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், தாக்குதல் நடந்த இடங்களை அவர் விரிவாகக் குறிப்பிடவில்லை. ஈரானில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 50 சதவீதம் கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100இற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று ஆம்னெஸ்டி தெரி வித்திருந்தது. ஆம்னெஸ்டியின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்து விட்ட மை குறிப்பிடத்தக்கது.