கிளிநொச்சியில் கன மழை – 77 குடும்பங்கள் பாதிப்பு

breaking
கிளிநொச்சியில் பெய்துவரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு கிராம சேவகர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தர்மபுரம் மேற்கில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விஸ்வமடு பிரமந்தனாறு வீதி வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை பாரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்படவில்லை எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.