வடக்கு, கிழக்கு , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடனான காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் 1607 குடும்பங்களைச் சேர்ந்த 5904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும்
வடக்கு, கிழக்கு , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நாளையும் நாளை மறுதினமும் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த மாகாணங்களில் வாழும் மக்கள் கடும் மழையால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலைப்பாங்கான பிரதேசங்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதோடு, குறித்த பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மண்சரிவு ஏற்படக் கூடிய இடங்கள் இனங்காணப்பட்டால் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் மக்கள் கோரப்பட்டுள்ளனர்.
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக மண்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகத் தெரிவித்து களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறையில் புளத்சிங்கள, வலல்லவிட்ட, மத்துகம மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, நாகொட, இமதுவ மற்றும் பத்தேகம ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மண் சரிவு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவலிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்கள்
மழை , வெள்ளம் , மின்னல் தாக்கம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கங்களால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5000 ஐ விட அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கத்தினால் கோரளைப்பற்று , கோரளைப்பற்று தெற்கு , மண்முனை மேற்கு , மண்முனை வடக்கு, காத்தான்குடி மற்றும் மண்னை பற்று ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 1050 குடும்பங்களைச் சேர்ந்த 3765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 4 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 51 குடும்பங்களைச் சேர்ந்த 185 பேர் இரு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை
பதுளை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் ( நவம்பர் 30, டிசம்பர் 1ஆம் திகதிகளில் ) மாத்திரம் கடும் மழையால் 193 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹல்துமுல்லை, லனுகல, வெலிமட, பசறை, ஊவாபரனகம, எல்ல, பண்டாரவளை, ஹாலிஎல மற்றும் பதுளை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் அனர்த்தத்தால் மூவர் காயமடைந்துள்ளதோடு, இரு குடியிருப்புக்கள் முழுமையாகவும், 93 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்தோடு பாதிக்கப்பட்ட 76 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் 3 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா
நுரரெலியா மாவட்டத்தில் வெள்ளம், மண்சரிவு, மரம் முறிந்து விழுந்தமை என்பவற்றால் நுவரெலியா, வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேசங்களில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். இங்கு மண்சரிவில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதோடு குடியிருப்பொன்று முழுமையாகவும், 8 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அத்தோடு பாதிக்கப்பட்ட 74 குடும்பங்களைச் சேர்ந்த 279 பேர் 6 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேசத்தில் கடும் மழையால் 132 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் இரு பாதுகாப்பு முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலை
மொனராகலை மாவட்டத்தில் பிபில, மெதகம, சியம்பலாந்துவ, மொனராகலை, புத்தள மற்றும் கதிர்காமம் ஆகிய ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 34 குடும்பங்களைச் சேர்ந்த 114 பேர் கடும் மழை மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 30 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 20 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் பாதுகாப்பு முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை
அம்பாறையில் காரைதீவு பிரதேசத்தில் கடும் மழையால் 37 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 10 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கேகாலை
கேகாலை மாவட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமை, மின்சாரம் தாக்கியமை மற்றும் கடும் மழையால் கேகாலை, கலிகமுவ, ருவன்வெல்ல, அரநாயக்க மற்றும் வரகாப்பொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் 15 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கண்டி
கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பததும்பர, உடுதும்பர மற்றும் கலகெதர ஆகிய பிரதேசங்களில் கடும் மழையால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் இங்கு 9 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மாத்தளை
மாத்தளை மாவட்டத்தில் ரத்தோட்ட பிரதேசத்தில் கடும் மழையால் 15 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பு முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைதீவு
முல்லைதீவு மாவட்டத்தில் வெள்ள அனர்தத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்