கோத்தா ஆட்சிக்கு வந்தார்: தையிட்டியில் தனியார் காணியில் வேகமாக முளைக்கும் விகாரை

breaking
  வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவம் புத்த விகாரை கட்டுவதை சட்ட ரீதியில் தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல் வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய புத்த விகாரை ஒன்றினை அமைக்கம் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் குறித்த விகாரையினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதனை சட்ட ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.