மலையக மக்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.?

breaking
மலையக மக்களை  குறைத்து மதிப்பிட வேண்டாமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான தெளிவுபடுத்தும் கூட்டம் ஹட்டன் மலையக மக்கள் முன்னணி காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஒரு சில அரசியல்வாதிகள் மலையக மக்களை கல்வியறிவு இல்லாதவர்கள் என்று கருதுகின்றார்கள். நான் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன். மலையக மக்கள் சிந்தித்து செயற்படக்கூடியவர்கள். எந்தவொரு தீர்மானத்தையும் சரியாக எடுக்கக்கூடியவர்கள். வாக்களிப்பதில் தங்களுடைய சின்னத்தை மிகவும் அழகாக தெரிவுசெய்து வாக்களிப்பதில் மலையக மக்கள் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக செயற்பட்டு வந்திருக்கின்றார்கள். இன்று மலையகத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. எனவே எங்கள் மக்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் தன்மானத்தைக் காக்க அளிக்கின்ற ஒரு சமூகம் என்பதை யாரும் மறந்து விடவேண்டாம்” என மேலும் தெரிவித்துள்ளார்.