விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்த தமிழக இளைஞர்.!

breaking
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்க முயன்றது.
கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது லேண்டருக்கும்,  இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம்,  மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.
விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது? என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் சேதம் அடையாமலும் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரோ மேற்கொண்டது.
இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு  நாசா அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச்சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இது விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே கடந்து  விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பவும், லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தது.
தற்போது ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய  புகைப்படங்களை ஆய்வு செய்ததில்  தரை இறங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 750 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் பாகங்கள் கிடப்பது தெரியவந்தது.
சந்திரயான் -2 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் பாகங்களை  முதன்முதலில் கண்டுபிடித்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் இந்திய பொறியியலாளர் சண்முக சுப்பிரமணியனுக்கு பெருமை  சேர்த்து உள்ளது.
புகைப்படங்களில், நாசாவின் குழு சுமார் 20 புள்ளிகளை  லேண்டரின் உதிரிபாகங்களாக தற்காலிகமாக அடையாளம் காண்கிறது.
ஆர்பிட்டர் நவம்பர் 11 அன்று  எடுத்த புகைப்படங்களை இன்று வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்பவர் இந்த புகைப்படங்களை ஆய்வு செய்து விக்ரம்  லேண்டர் கிடக்கும் பாகங்களை கண்டறிந்து நாசாவுக்கு தெரிவித்து உள்ளார்.
இந்த தகவலை பெற்ற  ஆர்பிட்டர் கேமிரா புகைப்படங்களை ஆய்வு செய்யும் குழு படங்களை  முன்னும் பின்னும் ஆய்வு செய்து விக்ரம் லேண்டர் பாகங்கள் கிடக்கும் பகுதியை  கண்டறிந்ததை உறுதிப்படுத்தி உள்ளது.
ஆர்பிட்டர் அதன் சுற்றுப்பாதையில் செப்டம்பர் 17, அக்டோபர் 14 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் விக்ரம் லேண்டர் தரை இறங்க நிர்ணயிக்கப்பட்ட  இடத்தின் மீது வழக்கம்போல் பறந்து சென்றது.
முதல் இரண்டு  சமயங்களில் நிலவில் இருள் மற்றும் கேமராவின் கோணம் காரணமாக தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை.
ஆனால் நவம்பர் 11ந்தேதி  சிறந்த பிக்சல் அளவு (0.7 மீட்டர்) மற்றும் வெளிச்சம்  (72 டிகிரி  கோணம்) ஆகியவை காரணமாக தெளிவான புகைப்படங்களை எடுக்க முடிந்தது .
நவம்பரில் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள்  விக்ரம் லேண்டரின் உதிரிபாகம் மற்றும் நிழலை காட்டுகிறது. மூன்று பெரிய குப்பைகள் ஒவ்வொன்றும் சுமார் 2x2 பிக்சல்கள் மற்றும் ஒரு பிக்சல் நிழலைக் கொண்டுள்ளன என நாசா கூறி உள்ளது.
சண்முக சுப்பிரமணியன் முதன்முதலில் கண்டறிந்த விக்ரம் லேண்டரின் பாகங்கள் பிரதான விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் உள்ளது. புகைப்படத்தின் அளவு (1.3 மீட்டர் பிக்சல்கள், 84 டிகிரி நிகழ்வு கோணம்) ஒரு பிரகாசமான பிக்சல் அடையாளமாகும்.