பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய 'கம்முரி' புயல்

breaking
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லூசோன் தீவை நேற்று 'கம்முரி' தாக்கியது. மணிக்கு 241 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக கடற்கரை நகரங்களிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது.அத்துடன் லூசோன் தீவுக்கு உட்பட்ட அல்பே, சூர் மற்றும் சோர்சோகான் உள்ளிட்ட 6 மாகாணங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இடம்பெயர்ந்தவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சூறாவளியினால் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களையும் பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இது இந்த வருடம் பிலிப்பைன்ஸை தாக்கும் 20வது சூறாவளியாகும். பலத்த காற்று வீசியதில் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.     கனமழையை தொடர்ந்து நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து கரைபுரண்டோடுகிறது. வீதிகள் சில வெள்ளம் மூழ்கியுள்ளன. வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. புயல் மற்றும் கடும்மழை காரணமாக தலைநகர் மணிலாவில் உள்ள விமானம் நிலையம் 12 மணி நேரத்துக்கு மூடப்பட்டது. இதனால் 500-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புயல் தாக்கிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கப்பல் போக்குவரத்தை நிறுத்த பிலிப்பைன்ஸ் கடலோர காவல் பிரிவு உத்தரவிட்டு உள்ளது. அல்பே மாகாணத்தின் தலைநகர் லொகஸ்பியில் தகரத்திலான மேற்கூரையுடன் கூடிய வீட்டின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் வீட்டில் இருந்த ஒருவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புயல் மற்றும் கடும்மழை மேலும் தொடரலாம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் 6 மாகாணங்களில் பாடசாலைகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேவேளை கம்முரி புயல் காரணமாக பிலிப்பைன்சில் நடந்து வரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விளையாட்டு போட்டிகள் தடைபட்டுள்ளன. சில விளையாட்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளில் பொலிசார் மற்றும் ராணுவவீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.