யாழில் கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா வியாபாரம்: வியாபார முறுகலில் ஒருவர் மீதுவாள்வெட்டு

breaking
வடதமிழீழம்: யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் கேமி குழுத் தலைவரின் சகோதரன் வாளால் தாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாமடைந்த அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர். அஜித் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு வெட்டுக் காயங்களுடன் கல்வியங்காடு பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளார். வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அந்த தகவலின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் இன்று காலை 11 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த சிலரே அவரை அங்கு வீசிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். கஞ்சா வியாபாரத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மற்றுமொரு குழுவினர் இவரை வெட்டியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.