கோட்டாபயவை கொலை செய்ய முயற்சி? – ஐவர் கைது!

breaking

 கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென சிங்கள ஊடகமொன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக குறித்த சிங்களப் பத்திரிகையில், கட்டுநாயக்க பகுதியில் ஜனாதிபதி கோட்டாபயவை படுகொலை செய்ய முயற்சித்தார்கள் எனத் தெரிவித்து வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் உட்பட ஐவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரின் குடும்பத்தில் எவராவது கொலை செய்யப்பட்டால் பாரிய பணத்தொகையுடன் வெளிநாடுகளில் நிரந்தர வசிப்பிடத்தை பெற்றுக்கொள்ளவும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது றிப்கான், கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் மதன், விசுவமடு தர்மபுரத்தைச் சேர்ந்த வேலு கோணேஸ்வரம், விசுவமடு கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்னம் நகுலேஸ்வரன்மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஆரியராஜன் கமலராஜா என்பவர்களே இவவாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

சீதுவ ஜயவர்தனபுர அமந்தோலுவ பிரதேசத்தில் ஒரு வீட்டில் இவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி இந்த சந்தேகநபர்கள் ஐவரும் ஒன்றிணைந்து மதுபானம் அருந்தியபோது ஜனாதிபதியை கொலை செய்ய சூழ்ச்சி தீட்டியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

இதில் பிரதான சூத்திரதாரியாக றிப்கான் என்பவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் வெளிநாடுகளில் வேலை செய்தவர் என்றும் ஹிந்தி மற்றும் பிறமொழிகளில் பரிச்சயமானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முன்னாள் முஸ்லிம் அமைச்சரொருவரின் நெருங்கிய தொடர்பும் இவருக்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் அவர் சிக்கினால் அந்த அமைச்சரின் செல்வாக்கின்மூலம் வெளிவர முடியும் என அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார் எனவும் குறித்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.