அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

breaking
1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாவது அப்பிள் பழங்கள்தான். இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான அப்பிள்களை கண்டறிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு பழுதடையாமல் இருக்கும் புதிய வகை அப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வகை அப்பிளை கண்டறிவதற்கு சுமார் 20 வருடங்கள் ஆனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை அப்பிளானது ‘ஹனிகிரிஸ்ப்’, ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997ம் ஆண்டு வோஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது. திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த அப்பிளை கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த அப்பிளை விளைவிப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரக அப்பிளை கண்டறிந்த வோஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கேட் எவன்ஸ் இதுபற்றி கூறுகையில், “இந்த வகை அப்பிள் மிகவும் மிருதுவானது. அதே சமயத்தில் திடமானதும் கூட. இதில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்ததாகவும் உள்ளது. இதை சரியான முறையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10 முதல் 12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும்” என்றார்.