சூடான் தொழிற்சாலை விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி

breaking
சூடானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். தலைநகர் கார்டூமின் புறநகர் பகுதியான பாக்ரியில் இயங்கி வரும் பீங்கான் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் இந்தியர்கள் 68 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் கடந்த 2ம் திகதி வழக்கம் போல பணிகள் நடந்து கொண்டிருந்தது. அங்கே மிகப்பெரிய டேங்கரில் வைக்கப்பட்டிருந்த திரவ பெட்ரோலிய எரிவாயுவை சிறு சிறு சிலிண்டர்களில் மாற்றும் பணிகளில் இந்தியர்கள் உள்பட சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது எரிவாயு டேங்கர் வெடித்து சிதறியதில் அந்த தொழிற்சாலையே தீப்பற்றி எரிந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் 18 பேர் இந்தியர்கள் ஆவர். பலியான இந்தியர்களில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (25) ஆவார். மற்றொருவர் கடலூர் மாவட்டம் அருகே உள்ள மானடிக்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் (35). மேலும் 130க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதில் 7 பேர் இந்தியர்கள் எனவும், அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். பின்னர் விபத்து ஏற்பட்ட ஆலையில் சிக்கியிருந்த இந்தியர்கள் 34 பேரை அதிகாரிகளின் உதவியுடன் மீட்டு ஆலையின் விடுதியில் தங்க வைத்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து கொள்ள 24 மணி நேர தொடர்பு எண்ணை (+249-921917471) இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி இருப்பதால், உடல்களை கண்டறிவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக தூதரகம் தெரிவித்து உள்ளது.