சூடான் விபத்தில் இறந்த தமிழக இளைஞன் பற்றிய நெகிழ்ச்சி தகவல்!

breaking
சூடான் தொழிற்சாலை விபத்தில் பலியான பண்ருட்டி வாலிபர் பற்றிய நெகிழ்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. சூடான் தலைநகர் கார்டூமின் புறநகர் பகுதியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தீயில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் 18 பேர் இந்தியர்கள் ஆவர். இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த வாலிபரும் பலியாகினார். பண்ருட்டி அருகே உள்ள மானடிக்குப்பம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராஜசேகர் (35). இவருடைய மனைவி கலைசுந்தரி (33). இவர்களுக்கு ஷிவானி (3) என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜசேகர் சூடான் நாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு நடந்த தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். இதற்கிடையில் ராஜசேகரின் சித்தப்பா திருநாவுக்கரசு மற்றும் அவரது உறவினர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ராஜசேகர் கடந்த 27.10.2017 அன்று வேலைக்காக சூடான் நாட்டுக்கு சென்றார். அங்குள்ள பீங்கான் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அவர், கியாஸ் டேங்கர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உடல் கருகி இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆகவே அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இது பற்றி திருநாவுக்கரசு கூறுகையில், “சூடான் நாட்டில் வேலை பார்த்து வந்த ராஜசேகர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலைசுந்தரியிடம் செல்போனில் பேசுவார். அதன்படி நேற்று முன்தினம் இந்திய நேரப்படி மதியம் 1 மணி அளவில் செல்போனில் வீடியோ கால் மூலம் அவருடன் பேசி உள்ளார். பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென ராஜசேகரின் பின்னால் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதை பார்த்து கலைசுந்தரி அதிர்ச்சி அடைந்தார். அடுத்த சில நொடிகளில் வீடியோ காலும் துண்டித்து விட்டது. மீண்டும் அவருடன் கலைசுந்தரி பேச முற்பட்டபோது, சிக்னல் கிடைக்கவில்லை. பின்னர் இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தோம். அதன்பிறகு அவர்கள் அங்கு நடந்த தீ விபத்தில் ராஜசேகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்” என்றார்.