யாழ் நகரப்பகுதி தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

breaking
தற்போது தீவிரமாக பரவிவரும் டெங்கு நோய் தொடர்பில் யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் இரண்டுவார காலத்துக்கு தமது சேவையை நிறுத்தவேண்டுமென மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கடந்த 10ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் என். வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள், மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸார் எனப் பல அரச உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானமாவது, 'டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியப்பாடுகள் தனியார் கல்வி நிலையங்களில் அதிகம் காணப்படுவதனால் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரண்டு வாரங்களுக்கு சகல தனியார் கல்வி நிலையங்களையும் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரவலான கருத்து முன்வைக்கப்பட்டது. குறித்த கருத்து தொடர்பில் ஆராய்ந்த பின்னர் தனியார் கல்வி நிலையங்களை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துவது' என தீர்மானிக்கப்பட்டது. மேற்குறித்த தீர்மானத்திற்கு அமைய மாநகர எல்லைக்குள் இயங்கிவரும் சகல தனியார் கல்வி நிலையங்களையும் இரண்டு வராங்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தனியார் கல்வி நிலைய இயக்குனர்கள், பொறுப்பாளர்கள், ஆசிரியர்களை கேட்டுக் கொள்கின்றேன். மாணவர்கள் மற்றும் சிறார்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் விசேட தீர்மானங்களுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவீர்கள் என மாநகரசபை நிர்வாகம் எதிர்பார்க்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றையதினம் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக டெங்கின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.