பிரித்தானிய கொன்சவேர்ட்டிவ் கட்சி தமீழீழத்தை ஆதரிக்கிறதா? - கோபி இரத்தினம்

breaking

வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 12ம் திகதி) நடைபெறவிருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதன்மைக் கட்சிகளில் ஒன்றான கொன்சவேர்ட்டிவ் (பழமைவாதக்) கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தமிழீழக் கோரிக்கையை பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான இக்கட்சி ஆதரிக்கிறது என்பதே இத்தகவல்.  இது பற்றி குழப்பமான தகவல்கள் வெளியாகிவருவதனால் அதனைத் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. கடந்த மாத இறுதியில் கொன்சவேர்ட்டிவ் கட்சியினால் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் (https://assets-global.website-files.com/5da42e2cae7ebd3f8bde353c/5dda924905da587992a064ba_Conservative%202019%20Manifesto.pdf) 53ம் பக்கத்தில் காணப்படும் கீழ்காணும் விபரமே இவ்வாறான தவறான செய்திக்குக் காரணமாக அமைந்தது. “"We will continue to support international initiatives to achieve reconciliation, stability and justice across the world, and in current or former conflict zones such as Cyprus, Sri Lanka and the Middle East, where we maintain our support for a two-state solution." இதன் தமிழாக்கம் இவ்வாறு அமைகிறது. “உலகின் எல்லா பகுதிகளிலும், தற்போதும் முன்னரும் முரண்பாடுகள் கொண்ட வலயங்களாக இருக்கும் சைப்பிரஸ், சிறிலங்கா மற்றும் மத்திய கிழக்கு, அங்கு நாம் இரண்டு நாடுகள் என்ற நிலைப்பாட்டைக் பேணிவருகிறோம், ஸ்திரத்தன்மையும் நீதியும் நிலவுவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.”

ஆங்கிலத்தில் இந்தவிடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும். இதில் இரண்டுநாடுகள் என்ற நிலைப்பாட்டை நாம் பேணி வருகிறோம் எனக்குறிப்பிடப்பட்டிருப்பது மத்திய கிழக்கு பிரதேசத்தை மாத்திரமே.  ஆங்கில மூலமான இந்த ஆவணத்தில் “Middle East, where we maintain our support for a two-state solution”  எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கில இலக்கணப்படி, இவ்வரியில் கொடுக்கப்பட்டள்ள காற்புள்ளி பின்வரும் விடயத்தை அந்த ஒரு பிரதேசத்திற்கு என மட்டுப்படுத்துகிறது.  ஆனால் அக்காற்புள்ளி அவ்விடத்தில் தரப்படாவிடத்து அது ஏனைய இரண்டு நாடுகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதாக அமையும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடயத்தில் மயக்கமான நிலைக்கு காரணமாக அமைந்த இன்னொருவிடயம். இலங்கைத் தீவிலும் சைப்பிரசிலும் தனிநாட்டுக் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது. இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் என்று இருநாட்டுக் கோரிக்கை உள்ளதுபோலவே, கிரேக்கர்களும் துருக்கியரும் வாழும் சைப்பிரசில், கிரேக்க – சைப்பிரஸ், துருக்கி – சைப்பிரஸ் என இருநாட்டுக் கோரிக்கை உயிர்ப்புடன் உள்ளது.  இஸ்ரேல் – பாலஸ்தீன நாட்டினையே இவ் விஞ்ஞாபனத்தில் மத்திய கிழக்கு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பிரதேசத்தில் வேறும் நாடுகள் உள்ளபோதும் இஸ்ரேல் – பாலஸ்தீனத்தை மத்திய கிழக்கு எனக்குறிப்பிடுவதன் மூலம் யூத மக்களை ஆத்திரப்படுத்தாமலும், பாலஸ்தீன மக்களை அரவணைப்பது போன்றும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொன்சவேர்ட்டிவ் கட்சியினர் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்ததில்லை. ஈழத்தமிழ் மக்களை ஒரு தேசமாகவோ அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதனையோ அக்கட்சி இதுவரை ஏற்றுக் கொண்டதில்லை. அக்கட்சியில் அதிகாரமற்ற பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரிருவர் தமிழ் மக்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில்  இருநாட்டுக் கொள்கை, இனவழிப்பு போன்ற விடயங்ககளைக் குறிப்பிட்டிருந்தாலும், கட்சியின் தலைமை அவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதில்லை.  அதுபோல் சைப்பிரஸ் விடயத்திலும் இரண்டு நாடுகள் என்ற கொள்கையை கொன்சவேர்ட்டிவ் கட்சி ஒருபோதும் வலியுறுத்தியதில்லை. இஸ்ரேல் – பாலஸ்தீன விடயத்தில்கூட ஒரு நழுவலான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. மேற்படி விஞ்ஞாபனத்தில் இலங்கைத்தீவு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவுபடுத்துமாறு பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் மக்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவரும், கொன்சவேர்ட்டிவ் கட்சியின் உபதலைவருமான போல் ஸ்கலியிடம் (Paul Scully) எழுத்து மூலம் கேட்டிருந்தது.  அதற்குப் பதிலளித்த போல் ஸ்கலி, தனித்து மத்தியகிழக்கு விவகாரத்தில் மாத்திரமே இரண்டு நாடுகள் தீர்வு என்ற நிலைப்பாட்டில் தமது கட்சியிருப்பதாகவும். இலங்கைத் தீவு விடயத்தில், பிளவு பட்ட சமூகங்களுக்கிடையில் நல்லிணக்த்தை ஏற்படுவதே தமது கொள்கை என எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது ரூவிற்றர் பதிவுகளிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனிலுள்ள சிறிலங்கா தூதுவர் எழுதிய கடிதத்திற்கும் இவ்வாறான பதிலே வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெயிலி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  இதுபோன்ற விடயங்களில் அறிக்கை வெளியிடும் நடைமுறை இல்லாததால் கொன்சவேர்ட்டிவ் கட்சி உத்தியோகபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. கொன்சவேர்ட்டிவ் கட்சி இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இல்லை என்பதனை அதனை ஆதரிக்கும் தமிழர்கள் நன்கறிவர். அதேபோல் அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவரும் என்ற வகையில் போல் ஸ்கலியுடன் இவர்கள் தொடர்புகளைப் பேணிவருகின்றனர். இவ்வியடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கொன்சவேர்ட்டிவ் கட்சியை ஆதரிக்கும் தமிழர்களில் ஒரு சாரார், ஆகக்குறைந்தது இலங்கைத் தீவில் பிளவுபட்ட சமூகங்கள் இருப்பதனை கொன்சவேர்ட்டிவ் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக மார்தட்டிக்கொள்கிறார்கள். இன்னொரு சாராரோ கொன்சவேர்ட்டிவ் கட்சி தனிநாட்டுக் கொள்கைக்கு ஆதரவு வழங்குவதாக தவறான பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியாவில் வாழும் தமிழ்மக்கள் தாம் விரும்பிய கட்சியை ஆதரிப்பது அவர்களது சுதந்திரம். ஆனால் தவறான பரப்புரைகள் மூலம் அவர்களது வாக்குகளை தாம் விரும்பும் கட்சிக்கு பெற்றுக்கொடுக்க முனையும் சில நபர்களையிட்டு தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.