தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு.!

breaking
குழந்தைகள் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களால் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்ற அடிப்படையில், அமெரிக்க காவல்துறை இந்திய அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல் சொல்லியிருந்த நிலையில் மத்திய அரசு தமிழக அரசிடம் குழந்தைகள் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் அதிகம் தமிழகத்தில் சென்னையில் தான் இருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தை தெரிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என்று அறிவுறுத்தியது. இந்த நிலையில் அவ்வாறான படங்களை பார்ப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்திருந்தது.   இதையடுத்து, குழந்தைகள் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றும் கும்பல் தனித்தனி குழுவாக 3 ஐ.பி. முகவரிகள் கொண்டு இயங்குவதை போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் சென்னை சைபர் பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு விசாரணையை துவக்கியது. விசாரணையில் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றுபவர்கள் பட்டியலில் சுமார் 60 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த ஐ.பி. முகவரிகளை வைத்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் ஐ.பி. முகவரியின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.