அதிர்ந்தது அமெரிக்கா : துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட அறுவர் பலி!

breaking
அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட குறைந்தது அறுவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியில் இருந்த ஒரு வணிக வளாகத்தில் சில பொலிஸ் அதிகாரிகளை துப்பாக்கிதாரிகள் தடுத்துநிறுத்தியதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த பல பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணம் இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என்று தாங்கள் நம்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நியூ ஜெர்ஸியில் சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றி அதனை முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்தில் முக்கிய பங்காற்றிவந்த ஜோசப் சீல்ஸ் என்ற 39 வயது பொலிஸ் அதிகாரி இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெர்ஸி நகர பொலிஸ் பொறுப்பதிகாரி மைக் கெல்லி, ''வீதிகளில் துப்பாக்கி கலாசாரம் பரவாமல் அதனை தடுக்கும் பணியில் இருந்த முன்னணி பொலிஸ் அதிகாரி சீல்ஸ்'' என்று கூறினார். இந்த துப்பாக்கி சண்டைக்கு காரணமானவர்கள் என்று கூறப்படும் சந்தேக நபர்கள் மிகவும் சக்திவாய்ந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.