சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர்க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

breaking
ஊழல் மற்றும் சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், தலைநகர் கார்டூம் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 130 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள பல நாணயங்களால் நிரப்பப்பட்ட சூட்கேஸ்களை வைத்திருந்ததாகவும், சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானிடமிருந்து 25 மில்லியன் டொலர்கள் பெற்றதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த 75 வயதான ஒமர் அல்-பஷீர், பல மாதங்களாக நாடு தழுவிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், இராணுவ அதிகாரிகளால் கைது செய்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்டார். சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்துவிட்டு கடந்த 1989ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த அல்-பஷீர், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தார். அவருக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் பதவி விலகினார். தற்போது அப்தெல் ஃபட்டா அல்-புர்ஹான் தலைமையிலான இறையாண்மை சபை, சூடானில் ஆட்சி நடத்தி வருகிறது.