யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிறீலங்கா பொலிசாரின் பாதுகாப்புடன் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதோடு, தாக்குதல் சம்வம் இடம்பெற்ற இடமான விஞ்ஞான பீடமும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்களை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கான ஒழுங்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே நடைபெற்று வந்த நிலையில், குறித்த வரவேற்பு நிகழ்வில் மாணவர்களை வரவேற்று கொண்டு செல்லும் போது கண்டிய நடனமும் வேண்டும் என சிங்கள மாணவர்களால் கோரப்பட்டது. இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மாணவ ஒன்றிய பிரதிதிகள் மறுப்பு தெரிவித்திருந்திருந்தனர். தமிழ்ப்பாரம்பரிய முறையிலேயே கடந்த பல தசாப்த காலமாக இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன எனவும், ஆகையால் தமிழ் மரபுப்படியே மாணவர்கள் வரவேற்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. கண்டிய வரவேற்பு நடனத்திற்கு பதிலாக நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்குள் பௌத்த நிகழ்வுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் மூலம் மாணவர்களை தாமும் வரவேற்க வேண்டும் எனவும் முரண்பட்டனர்.
இதன் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முடிவே இறுதி முடிவு என அறிவிக்கப்பட்டு, நேற்றைய தினம் மதியமளவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் போது தமிழ் மரபு முறைப்படி மாணவர்கள் அழைத்து வரப்பட்டவேளை, திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை அங்கு கொண்டுவந்து ஆடினார்கள். இதனால் கொதிப்படைந்த தமிழ் மாணவர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றியும், நிகழ்ச்சி ஒருங்கமைப்புக்கு மாறாக எவ்வாறு கண்டி நடனம் கொண்டுவரப்பட்டது என சிங்கள மாணவர்களிடம் கேட்டனர். இதன் போது வாக்கு வாதம் முறுகல் நிலைக்கு செல்ல இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதன் போது விஞ்ஞான பீடாதிபதி சிறிசற்குணராஜா மற்றும் மாணவர் ஒன்றிய தலைவர் சிசிந்தன் ஆகியோர் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டனர்.
இதனை படம் பிடித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி வந்து, பொலிசாருக்கு முன்னாலேயே மிரட்டினர். இதன் போது தொலைக்காட்சி ஊடகவியலாளரான என். குகராஜ் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தனர். எனினும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளரை அங்கிருந்து அழைத்து சென்றார். இதற்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவரை தடியை கட்டி அச்சுறுத்தியிருந்தனர்.
அனைத்து மாணவர்களும் வெளியேறிய பின்னர், பல்கலைக்கழகமும் அதனை அண்டிய சூழலும் அமைதியடைந்தது. அனைத்தும் ஓய்ந்த பின்னர் பல்கலைக்கழக உயர் மட்டம் கூடி விஞ்ஞான பீடத்தை காலவரையின்றி மூடுவதாக அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் இரவு வரை எந்த மாணவர்களும் கைதாகவில்லை. எனினும் மோதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பும் என பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய, சொத்துக்களுக்கு சேதத்தை விளைவித்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.