கேணல் கிட்டு அவர்கள் தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து………!

breaking
அன்பின் டாலிக்கு, ஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகிறது. மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி இருந்தால்தான் எதையும் ரசிக்கமுடியும். எனது நாட்டையும் மக்களையும் பிரிந்திருப்பதே மிகவும் தாங்கமுடியாத விடயம்………….. இந்நிலையில் எனக்கு அமைதி எங்கே? உள்ளத்தில் அமைதியாக இருப்பதுதான் பெரிய கொடை. அதுதான் உண்மையான அழகு. ஆனால் வெறும் புற அழகுகள் எப்படி அமைதியைக் கொடுக்கமுடியும். ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்றான், இறக்கின்றான், ஆனால் அவன் மனித குலத்திற்கு ஆற்றும் சேவைதான் நிலைத்திருக்கின்றது. உன்னால் முடிந்தவரை சேவைசெய். பொழுதுகளை வீணே கழிக்காதே. மேலும், சுயநலமும் குறுகிய பிற்போக்குச் சிந்தனையும் கொண்ட வட்டத்தில்தான் நீர் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர். ஆனால் இவற்றைக்கண்டு இவர்களின் மாயைக்குள் சிக்குண்டு விடாதே. கவனமாயிரு, ஆழ்ந்து சிந்தி. அங்கு பலர் நுனிப்புல் மேயும் ஆடுகளைப் போல் எதையும் ஆழ்ந்து பாராமல், வெறும் சித்தாந்தங்களைப் படித்துவிட்டு வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கின்றனர். “நான்கு குருடர்கள் யானையைப் பார்த்தது போல்”தான் இவர்கள் விடுதலைப் போராட்டத்தை விமர்சிப்பதும். எதையும் எல்லோரும் விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனங்கள் கூட சில வழிகளைக் காட்டவேண்டுமே ஒழிய, வெறும் மாயையில் வாழமுடியாது. அப்படியானால் அவற்றை வெறும் ஏட்டுச்சுரக்காய் என்று கூறுவதுதான் வழக்கம். உலகத்தில் எல்லோருடைய கருத்தையும் கேள்; சிந்தி, நன்றாகச் சிந்தி; நீயாகச் சிந்தி; யாரும் உனக்காகச் சிந்திக்கமாட்டார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். உலகத்தில் நாம் படிக்கவேண்டியவை ஏராளம். நீயும் அப்படியே செய். வெறும் புத்தகத்தை மட்டும் படிக்காமல் உலகத்தையும் வாழ்க்கையையும் படித்துக்கொள். ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு மணிப் பொழுதும் எதையோ எமக்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்துகொண்டவனும் படித்துக் கொண்டவனும்தான் ஞானியாகின்றான். அதைவிடுத்து வெறும் வரட்டுச் சித்தாந்தங்களைப் பேசும் போலித் தத்துவவாதிகளின் பசப்பில் ஏமாந்து விடாதே. சிந்தனையும் தேடலுமே ஒருவனை உயர்த்தமுடியும். ஆனால் எப்போதும் மனிதனுடைய சிந்தனை மற்றவர்களுக்காகவும் மனித இனத்தை முன்னேற்றுவதற்காகவும் இருக்கவேண்டும், அதைவிடுத்து தமது விற்பன்னத்தைக் காடவும் மற்றவர்களை விமர்சிக்கவும் மட்டும் இருக்கக்கூடாது. என் வாழ்நாளில் நான் ஒரு போராளியாக, என் மக்களுக்காக, அவர்களின் சுபீட்சத்துக்காகப் போராடும் வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். எனது ஆயுட்காலம் வரை இப்பணியைச் செய்யவேண்டும் என்பதே என் விருப்பம் நாம் எமது மக்களுக்கு அமைதியையும் சுபீட்சத்தையும் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கின்றோம். எமது எதிரியோ எமது தேவையை, கோரிக்கையை ஏற்பதாக இல்லை. தான் கொடுக்கும் சலுகைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறானே ஒழிய, எமது உரிமையைக் கொடுக்கத் தயாராக இல்லை. நாம் பேராசை பிடித்தவர்களோ, உலகின் நடைமுறை தெரியாதவர்களோ அல்ல, நாம் கேட்கின்ற அடிப்படை உரிமை, எமது மண்ணிலே எமது மக்கள் உயிர்வாழ்வதற்கான உரிமைதான். அதைவிடுத்து மாகான சபையாலோ அல்லது அதைவிடக் கூடிய அதிகாரங்களைக் கொண்ட சபையாலோ எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. எமது மக்களின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்படும் ஒரு வடிவத்தைத்தான் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம். அன்புடன் ச.கிட்டு.