அபுதாபியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண்கள் இருவர் உயிரிழப்பு

breaking
அபுதாபியில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (சனிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளனர். 35 மற்றும் 50 வயதுடைய இரு இலங்கைப் பிரஜைகளே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது பெயர் விபரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை. கடந்த வியாழக்கிழமை அதிகாலை பெண் சுத்திகரிப்பாளர்களுடன் தலைநகரலிருந்து எமிரேட்ஸில் அல் ஷாஹாமா நோக்கிச் சென்ற சிறிய ரக பேருந்தொன்று லொறியுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 19 பேர் காயமடைந்திருந்தனர். பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளும் எம்.பி.எம் என்ற ஐக்கிய அரபு எமிரேட் நிறுவனத்தில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டின. இதுவரை விபத்தில் உயிரிழந்த 6 பேரில் ஒருவர் மாத்திரமே பெயரிடப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் பலர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.