பாலியல் கொடுமையால் தமிழ் சிறுமி கொலை

breaking
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகாசி அடுத்த கொங்கலாபுரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி அதே பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி, உடல் உபாதை கழிப்பதாகக் கூறி வெளியில் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் பல இடங்களிலும் தேடியுள்ளனர். இரவு முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். காலை சிறுமியின் வீடு இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள புதர்ப்பகுதியில் கிழிந்த ஆடைகளுடன் அவரது சடலம் கிடப்பதைப் பார்த்துவிட்டு அவ்வழியாகச் சென்றவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.