எத்தனை ஒலிப்பதிவுகள் வெளிவந்தாலும் அஞ்சமாட்டேன்: தைரியமாக எதிர்த்து நிற்கும் ஹிருணிகா

breaking
  நூறு ஒலிப்பதிவுகள் வெளியானாலும் நான் அஞ்சமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அவர், “எல்லோரும் சேர்ந்து இன்று என் மீது கல்லெறிகின்றனர். நான் அதற்கு கவலைப்படப் போவதில்லை. இங்கு எல்லோரும் சுற்றவாளிகள் போல நடித்து மற்றவர்களை பற்றி தேடுகின்றனர். என் மீது நூறு கற்கள் வீசினாலும் இப்படியான நூறு ஒலிப்பதிவுகள் வெளியானாலும் நான் அஞ்சமாட்டேன். யாராலும் என்னை வீழ்த்த முடியாது. அப்படி யாராவது நினைத்தால் அது தவறு என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் கொண்டிருந்த நட்பு குறித்து ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கமாக விளக்க வேண்டும். நான் கொலை செய்யவில்லை. கொள்ளையடிக்கவில்லை. தற்போது நாட்டு மக்கள் பிரச்சினையில் இருக்கும் போது இவற்றை வெளியிடுகின்றனர். நான் இது குறித்து சி ஐ டியில் முறைப்பாடொன்றை செய்துள்ளளேன். விரைவில் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளேன். அதில் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பேன். பொலிஸ் இந்த சி.டி களை தனியார் தொலைக்காட்சி உரிமையாளருக்கு விற்றது. இந்த குரல் பதிவுகளை வெளியிட்டவர்கள் திரிபுபடுத்தி வெளியிடுகின்றனர். நாமலுடன் நான் நட்பாக இருந்ததாக கூறுகின்றனர். இது உண்மையா என்று நாமலிடம் கேளுங்கள். உண்மையை அறியாது தமக்கு தேவையானவற்றை மட்டும் வெளியிடுகின்றனர். இன்று நாட்டில் கோட்டாவோ மஹிந்தவோ ஆட்சி செய்யவில்லை. தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் ஒருவர் தான் அதனை செய்கிறார். அவர் தனது தம்பியை சிறையில் இருந்து விடுவிக்க எதையும் செய்வார். அப்படி செய்து அவர் பிரதமராகவும் வரலாம். எனது தந்தையை கொலை செய்தது ஒரு சதி. அதனை செய்தது துமிந்த சில்வா. அதனால் தான் அவருக்கு தண்டனை கிடைத்தது. அதில் மறைக்க ஒன்றுமில்லை. எம் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை செய்கின்றனர். ‘பிரிசன் ப்ரேக்’ பாகம் இரண்டு என்ற படமே இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் நான் எனது பேக்சைட், ப்ரொண்ட்சைட் எல்லாவற்றையும் என் கணவருக்கு மட்டுமே வழங்குவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.