யாழ் மாவட்டத்தில் ரெலோவில் களமிறங்கும் சுரேன் !

breaking

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது. ரெலோ சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைமைக்குழு உறுப்பினருமான சுரேன் என்றழைக்கப்படுகின்ற சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்ததாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று அறிவித்துள்ளார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ரெலோவிற்காக ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவருக்கு வழங்குவதற்குத் தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டவரும் சிறந்த கல்வியலாளருமான சுரேந்திரன் குருசுவாமிக்கு அந்த ஆசனத்தை ஒதுக்குவதன் மூலம் நிர்வாகத் திறனும் மும்மொழித் தேர்ச்சியும் ஆளுமையும் மிக்க ஒருவரை தமது கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியும் என செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானத்தின் மூலம் கட்சி, யாழ். மாவட்டத்தில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற முடியும் எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.