யாழ்.மானிப்பாய் தாக்குதலுக்கு உரிமை கோரியது “ஆவா 001” குழு..! புலிகள் பாணியில் அறிக்கை, தாக்குதல் தொடரும் என எச்சரிக்கை

breaking
  பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சிலர் தமது முகநூல்களில் "தமிழர்கள் அடையாளமாக காணப்படும் யாழ்பாண பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும் அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெண்களுக்கு எதிராக ராக்கிங் மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது. ராக்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பச்சத்தில் இது போன்ற தண்டனை தொடரும் இனிவரும் காலங்களில் என பதிவிட்டுள்ளனர்.