கொரோனா வைரஸால் பெண்களை விடவும் ஆண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக அந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் மேற்படி வைரஸ் தொற்றின் தோற்றுவாய் பிராந்தியமான வுஹான் நக ரில் அந்த வைரஸ் பரவ ஆரம்பித்த நிலை யில் பெறப்பட்ட தரவுகளின் பிரகாரம் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 68 சதவீதமானவர்கள் ஆண்கள் என ஆய்வொன்றின் மூலம் அறியப்பட்டுள்ளதாக பிஸினஸ் இன்சைடர் ஊடகம் அறிக்கையிட்டுள்ளது.
அதேசமயம் வுஹான் பல்கலைக்கழக மருத்துவமனையில் மேற்படி வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட 138 நோயாளிகளிடமிருந்தான தரவுகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு ஆய்வு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 54.3 சதவீதமானவர்கள் ஆண்கள் எனத் தெரிவிக்கிறது. அந்த நோயாளிகளில் கால் பகுதியினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் 4 சதவீதமானவர்கள் உயிரிழந்திருந்தனர்.
ஆனால் எதனால் ஆண்கள் இந்த வைரஸ் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டனர் என்பதற்கான காரணம் தெளிவற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகளவில் வயதான ஆண்களே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆய்வாளர்கள் ஏன் இந்த வைரஸ் ஆண்களை அதிகளவில் பாதித்துள்ளது என்பது தொடர்பிலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பொதுவாக பாதுகாப்பைப் பெற காரணமாக அமைந்தது எது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
அதற்கு ஏனைய அடிப்படை உடல்நல நிலைமைகள் அல்லது பெண்களது பாலி யல் ஹோர்மோனான ஈஸ்ட்ரோஜனின் பாதுகாக்கும் தன்மை என்பன காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். மேற்படி நோயாளிகள் 22 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாக இருந்தனர்.
மேலும் அவர்களில் 46.4 சதவீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த நோய் பாதிப்பு நிலைமைகள் மற்றும் பெண்களுக்கு ஈஸ்ரோஜன் ஹோர்மோன் சுரப்புக் குறையும் 45 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட மாதவிடாய் நிற்கும் காலம் என்பன இந்த வைரஸ் தொற்றில் பங்களிப்பு செய்துள்ளதா என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.