மாந்தை மேற்கு சன்னார் பகுதியில் கேபில் கம்பிகளினால் கட்டப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் மூன்று மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு மேய்ச்சலுக்காகச் செல்லுகின்ற மாடுகள் அங்குள்ள மேய்ச்சல் தரவையை அண்டிய பகுதிகளில் இனம் தெரியாத நபர்களினால் தொடர்ச்சியாக கம்பிகள் மூலம் கட்டி அவற்றை மரங்களில் கட்டுவதாக கால்நடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் மாடுகள் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, கம்பி கழுத்தை இறுக்குகின்ற சந்தர்ப்பத்தில் மாடு உயிரிழக்கும் சம்பவமும் இடம்பெறுகின்றது. அவ்வாறு பல மாடுகள் உயிரிழந்துள்ளதோடு பல மாடுகள் இனம் தெரியாத நபர்களினால் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலே நேற்று புதன் கிழமை காலை 3 மாடுகள் கேபில் கம்பியினால் கட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மாட்டின் உரிமையாளர்களினால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் அடம்பன் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டகால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.