நிர்பயா கொலை விவகாரம்: வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்

breaking
நிர்பயா கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் திகதியை அறிவிக்கக்கோரிய வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வரும் 17ஆம் திகதிவரை  ஒத்திவைத்தது. இது குறித்த வழக்கு, இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தற்போது உத்தரவு பிறப்பித்தால் மேலும் சட்டச் சிக்கல்கள் உருவாகும் என நீதிபதிகள் தெரிவித்ததுடன் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த முதலாம் திகதி தூக்கிலிடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவதில் சட்ட ரீதியான தடை உருவானது. டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு, மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது. இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய திகதியை அறிவிக்கக்கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு இன்று மாலை விசாரிக்கப்படும் என நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய விசாரணையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டள்ளது.