ஜப்பான் கடலிலுள்ள கப்பலினுள் 44பேருக்கு கொரோனா தொற்று!

breaking
ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகவும் இதன்மூலம் 218 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைமண்ட் பிரின் சஸ் என்ற சொகுசு கப்பல் ஹொங்கொங்கில் இருந்து கடந்த 3-ஆம் திகதி ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்துக்கு வந்தது. அதில் இருந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கப்பலில் இருந்த 3,711 பயணிகள் மற்றும் ஊழியர்கள் கப்பலில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டது. கப்பலை கடலிலேயே நிறுத்தி பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் வரை 174 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சொகுசு கப்பலில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. இதுகுறித்து ஜப்பான் சுகாதாரதுறை அமைச்சர் காட்சூநோபு காதே கூறியதாவது:- சொகுசு கப்பலில் மேலும் 221 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதில் 43 பேர் பயணிகள், ஒருவர் கப்பல் ஊழியர். அவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்களில் முதலில் முதியவர்களை கப்பலில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பணி நாளை அல்லது அதன் பிறகு தொடங்கப்படும். கப்பலில் இருந்து கீழே இறக்கப்படுபவர்கள் அரசு அளிக்கும் உறைவிடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்..