2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் நகர் மத்தியில் ச.தொ.ச. கட்டுமான பணியின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மீட்கப்பட்ட தடயப்பொருட்களை பகுப்பாய்வு செய்வதற்காக தரப்படுத்த சென்றபோது மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் பொறுப்பிலிருந்த பாதுகாப்பு அறைக் கதவு கைபிடி உடைந்தும் யன்னல் திறந்திருந்தும் காணப்பட்டதால் பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவ் வழக்கில் முன்னிலையான அரச சட்டவாதி காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சார்பாக ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி மீது தகாத வார்த்தையை பிரயோகித்தமையால் சட்டத்தரணிகள் வெளிநடப்பு செய்தனர்.
2018 மார்ச் மாதம் மன்னார் நகரில் கண்டு பிடிக்கப்பட்ட மன்னார் ச.தொ.ச. புதை குழி வழக்கு கடந்த திங்கட் கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இவ் வழக்கில் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்து வருகின்ற மன்னார் ச.தொ.ச. புதை குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சான்றுப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவதற்கான நடவடிக்கையாகவே இவ் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இச் சமயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளுடன் இந்த புதைகுழி அகழ்வுக்கு பொறுப்புவாய்ந்த அதிகாரியாக கடமையாற்றிய சட்டவைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி ராஜபக் ஷ சார்பில் முதன்முதலாக அரச சட்டவாதி ஒருவரும் இவ்வழக்கில் ஆஜராகியிருந்தார்.
இவ் வழக்கையடுத்து அன்றைய தினம் காலை பத்து மணியளவில் தடையப் பொருள் வைக்கப்பட்ட அறைக்கு சென்று தடயப்பொருட்களை பிரித்தெடுப்பதற்காகமுயன்ற வேளையில் சான்று பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு கைபிடி உடைந்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ் அறையின் யன்னல் கதவும் திறந்திருந்ததும் கவனிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் இந்த நிலையில் குறித்த தடயப் பொருட்களை பகுப்பாய்வுக்காக பிரித்தெடுக்க முடியாது எனவும் இது விடயமாக கைரேகை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரினர். இது விடயமாக பொலிஸ் விசாரணையுடன் ஆய்வு ஒன்றும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தடயப் பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை தடைப்பட்டது.
பின் இவ் வழக்கு செவ்வாய்க் கிழமை மீண்டும் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் காலையில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது இரு தரப்பு சட்த்தரணிகளின் மத்தியில் வாதப் பிரதி வாதம் இடம்பெற்றது. இந்த வேளையில் அரச சட்டவாதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் வாதிட்ட சிரேஷ்ட சட்டத்தரணியை நோக்கி தகாத வார்த்தை பாவித்தமையால் இவ் வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளும் அத்துடன் மன்னார் சட்டத்தரணிகள் அனைவரும் அரச சட்டவாதி பாவித்த தகாத வார்த்தையை வாபஸ்பெற வேண்டும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணியிடம் மன்னிப்பும் கோர வேண்டும் என தெரிவித்து மன்றைவிட்டு வெளியேறினர்.
பின் அரச சட்டவாதி தான் பிரயோகித்த தகாத வார்த்தையை வாபஸ் வாங்கியதுடன் சிரேஷ்ட சட்டத்தரணியிடம் மன்னிப்பும் கோரியதைத் தொடர்ந்து வெளியேறிய சட்டத்தரணிகள் மீண்டும் மன்றுக்குள் பிரவேசித்தனர்.
அத்துடன் இந்நீதிமன்றில் சரியான ஒரு மொழி பெயர்ப்பாளர் இல்லையென்பதையும் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்றிலிருந்து 1.15 மணியளவில் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இவ் வேளையில் அரச சட்டத்தரணி மன்றில் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஐராக முடியாது எனவும் இதற்கான தகுதி இவர்களுக்கு கிடையாது எனவும் தெரிவித்து தனது வாதத்தை மன்றில் முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணத்தை பிறிதொரு திகதியில் மன்றில் சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இவ் வழக்கு மீண்டும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கட்டட அறையொன்றில் வைக்கப்பட்டுள்ள இந்த தடயப்பொருட்கள் இன்னும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படாத நிலையில் மனித புதைகுழிக்கான பொறுப்பதிகாரி சட்டவைத்திய நிபுணர் ராஜபக்ஷ பொறுப்பிலே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் 2018இல் மன்னார் நகர மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட இப்புதைகு ழியில் 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்ட நிலையில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப் பட்டதுடன் இங்கு மீட்கப்பட்ட தடயப் பொருட்களும் மன்னார் நீதிவான் நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
இவ் அறை உடைந்திருந்த விடயம் தொடர்பாக பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இவ் அறை தற்பொழுது சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.