பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கல்முனையில் துண்டுப்பிரசுரங்கள்!

breaking
  அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள அஷ்ஃரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுங்கள் யாவும் இன்று (சனிக்கிழமை) காலை பிரதான வீதிகள், கடைகள், சந்தைகள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்துண்டுப்பிரசுரத்தில் ‘வெளியேறு..! வெளியேறு! ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு! பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று!’ எனக் குறிப்பிடப்பட்டு, எமது பிரதேசத்தில் அஷ்ஃரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற பாலியல் ரீதியான செயற்பாடுகளை கண்டும் காணாமல் செயற்பட்டு வருகின்ற வைத்திய அத்தியட்சகர் ரஹ்மானை வெளியேற்றி புதிய நிர்வாகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டு கல்முனை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் அமைப்பு உரிமை கோரியுள்ளது. மேற்குறித்த வைத்தியசாலையில் விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியுள்ளன. இவ்விடயத்தை வெளியிட்டதற்காக விசேட தர தாதிய உத்தியோகத்தரான செல்வி ஆர்.தேவாமிர்ததேவி உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் இதனால் பெண்கள் அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் மகஜர் ஒன்று வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.