20 பவுன் நகைகள், 450,000 பணத்துடன் அகப்பட்ட யாழின் பிரபல திருடர்கள்

breaking
  யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கொள்ளையிடப்பட்ட 20 பவுண் நகையுடன் ஐவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிறிலங்கா காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 450,000 ரூபா களவாடப்பட்ட பணம், மற்றும் 20 பவுண் களவாடப்பட்ட நகைகள் மீட்கப் பட்டதோடு குறித்த வீட்டில் தங்கியிருந்த சந்தேகத்துக்கிடமான அரியாலையை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் வழிப்பறி மற்றும் நகைத் திருட்டுக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினரால் குறித்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 5 பேரும் 20 தொடக்கம் 25 வயது உடையவர்கள் எனவும் சந்தேக நபர்களை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.