வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள்
‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி தமிழ்மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விடுதலைப்போராட்டம் முனைப்போடு எழுச்சியடைய, வெளித்தெரியாமல் பல வழிகளில் அயராது உழைத்தவர். விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலங்களில் காடுகள் ஊடான நகர்வுகளின் போது வழிகாட்டியாக நின்ற சந்திரன் என அறியப்பட்ட ஒரு தேசப்பற்றாளனை நாம் இன்று இழந்துநிற்கின்றோம். இவர் தேசத்தின் விடுதலைக்காகப் பணியாற்றும் காலத்தில் எதிரிகளால் தேடப்பட்ட போதும், பல்வேறு இடங்களில் குடும்பத்துடன் மறைந்து வாழ்ந்துகொண்டு தன் விடுதலைப்பணியைத் தொடர்ந்தவர். தாயக மண்மீட்புப் போராட்டம் பெருவளர்ச்சி கண்டிருந்த காலப்பகுதியில் பல்வேறு தளபதிகளுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களில் இறுதிவரை பணியாற்றியவர் பாலச்சந்திரன் அவர்கள். இவரது விடுதலைச் செயற்பாட்டிற்காக சிலவருடங்கள் எதிரியின் சிறைகளில் பெரும் துன்பங்களை அனுபவித்தவர். மாவீரர்களின் கனவினையும், தாயகமக்களின் விடுதலை உணர்வுகளையும் தன்னுள்தாங்கி, ஆரம்பகாலம் தொட்டு அர்ப்பணிப்போடு விடுதலைப் பணியாற்றிய இவருடைய இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ மக்களிற்கும், அவரது குடும்பத்தினரிற்;கும் பேரிழப்பாகும். இவரது இழப்பில் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன்; திரு.வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் இனப்பற்றிற்காகவும், இவர் ஆற்றிய விடுதலைப் பணிக்காகவும் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிக்கின்றோம்.‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’
அனைத்துலகத் தொடர்பகம். தமிழீழ விடுதலைப் புலிகள்.