சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உகானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியா மற்றும் ஈரானில் வேகமுடன் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தென் கொரியாவில் மேலும் புதிதாக 483 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 6,767 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது என்று கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரைசால் உலகம் முழுவதும் சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.