கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது...? தற்காப்பது எப்படி...?

breaking
      கொரானா வைரஸ் என்றால் என்ன? 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள நாவல் கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஊஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது. விலங்குகளுடன் சீனவர்கள் நெருக்கமானவர்கள் என்பதால், ஊஹானில் இந்த வைரஸ் விரைவாக பரவத் தொடங்கியுள்ளது.  ஊஹான் மாகாணத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிக்கு சென்றவர்கள் மூலமாகவும் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவது எப்படி...? கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவும். என்ன பாதிப்பை ஏற்படுத்தும்...? கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. மருந்து இருக்கிறதா...? கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதை தடுப்பதே தற்போது முதன்மை நோக்கமாக இருக்கிறது. எச்.ஐ.வி.க்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து, அதன் மூலம் மருந்து கண்டறியும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். எப்படி தற்காத்துக்கொள்வது...? வைரஸ் பற்றிய தகவல், உரிய மருத்துவ சிகிச்சை ஆகியவை தொடர்பான செய்திகளை அரசு ஊடகம் மற்றும் பிற செய்தி ஊடகங்கள் வழியே தெரிந்துகொள்ளுங்கள். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் உறுதிபடுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம், பிறருக்கும் பகிர வேண்டாம். இருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை இரு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அனுகவும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மூக்கு - வாயை மறைக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே செல்வது நல்லது. சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். எப்போதும் கை கழுவுதல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இருமல், தும்மலின் போது மூக்கு-வாயை துணியால் மூடிக்கொள்வதும் அவசியம்