கல்முனையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்த தகவலைத் திரட்ட நடவடிக்கை!

breaking
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் துறைசார் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழைமை) இந்தக் கலந்தரையாடல் இடம்பெற்றது. இதன்போது, வெளிநாடுகளில் இருந்து கல்முனை பிராந்தியத்தில் முடங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் பிரதேச வாசிகள் தொடர்பாக விபரங்கள் சேகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் கல்முனை பிரதேசத்திற்கு வருகை தந்த 145 பேரையும் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிக விடயங்கள் தொடர்பாக விசேடமாக கல்முனை மாநகர சபையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை பிரதேச செயலாளர் எம்.நஸிர் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப், கல்முனை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக், கல்முனை பொது சந்தை செயலாளர் ஏ.எல். கபீர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.