கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடம்: பெண்ணொருவர் குணமடைந்து வீடு திரும்பினார்

breaking
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதன்படி இலங்கையில் இதுவரை ( நேற்று இரவு 7.00 மணி) அடையாளம் காணப்பட்ட 102 கொரோனா தொற்றாளர்களில் மூவர் குணமடைந்துள்ளதுடன், மேலும் 99 பேர் தொடர்ந்து மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறினார். இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் இரு பெண்கள் உட்பட மூவர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் சீனப் பிரஜையான பெண் ஒருவர் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி குணமடைந்து வெளியேறியதுடன், 2 ஆவது கொரோனா தொற்றாளரான மத்தேகொடையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி கடந்த 23 ஆம் திகதி குணமடைந்து வெளியேறினார். இந்நிலையிலேயே நேற்று முன்தினம் 24 ஆம் திகதி மாலை இந்த பெண்ணும் குணமடைந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 7.00 மணி முதல் நேற்று இரவு 7.00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதியில் எந்த கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99 பேர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 89 பேரும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் 9 பேரும் முல்லேரியாவில் ஒருவரும் இவ்வாறு சிகிச்சை பெறுகின்றனர். இதனிடையே நாடளாவிய ரீதியில், 19 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் 255 பேர் சிகிச்சசை பெற்று வருகின்றனர். இதில் அதிகமானோர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அங்கு கொரோனா சந்தேகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 ஆகும். அதில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். இதனிடையே, யாழ். அரியாலையில் சுவிற்சர்லாந்து போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். திருகோணமலை – உப்புவெளி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார். போதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார். குறித்த போதகர் நேற்று முன் தினம் 24 ஆம் திகதி இரவு அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வரை உடல்நலத்துடன் இருப்பதாகவும் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார். எனினும், அரியாலையிலிருந்து திரும்பியது போதகருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் சுகாதார துறையினரும் பொலிசாரும் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.