இலங்கையில் இருவர் கொரோனோவால் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

breaking
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 102 கொரோனா தொற்றாளர்களில் இரு பெண்கள் உட்பட மூவர் குணமடைந்துள்ளதுடன், மேலும் 99 பேர் தொடர்ந்து மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். முதலில் சீனப் பிரஜையான பெண் ஒருவர் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி குணமடைந்து வெளியேறியதுடன், 2 ஆவது கொரோனா தொற்றாளரான மத்தேகொடையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி கடந்த 23 ஆம் திகதி குணமடைந்து வெளியேறினார். இந்நிலையிலேயே நேற்று முன்தினம் 24 ஆம் திகதி மாலை இந்த பெண்ணும் குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.