அரச ஊழியர்களை ஏமாற்றும் சிறிலங்கா அரசாங்கம்:மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

breaking
  சிறிலங்கா அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. காணொளி ஒன்றினை வெளியிட்டு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு அரச ஊழியர்களின் சம்பளத்தில் கடன்தொகைகள் அறவிடப்பட மாட்டாது என்று அரசாங்கம் முன்னரே அறிவித்தது. எனினும் மார்ச் மாதம் அரச ஊழியர்களின் சம்பளத்தில் கடன்தொகை அறவிடப்பட்டிருந்தது. அது தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பிய போது கடந்த மாதம் சுற்று நிரூபம் வெளியிடப்படுவதற்கு முன்னரே சம்பளத் தொகையை வங்கியில் வைப்பிலிடுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறினர். எனினும் இம் மாதத்திற்குரிய சம்பளம் வைப்பிலிடப்பட்டுள்ளதோடு, கடந்த மாதத்தை போன்று கடன்தொகை அறவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரச ஊழியர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். குறைந்தளவு சிங்கள தமிழ் புத்தாண்டைக்கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் மோசடி செய்து அரச ஊழியர்களை ஏமாற்றியிருக்கிறது. தற்போது அத்தியாவசிய சேவைகளுக்காக செல்லும் அரச ஊழியர்கள் அவர்களது சொந்த செலவிலேயே செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறானவர்களுக்கு கடன்தொகை உள்ளிட்டவை அறவிடப்பட்டு எஞ்சியுள்ள சம்பளம் போதுமானதாக இருக்காது. எனவே அரசாங்கம் மக்களை பற்றி மேலும் கருணை கொள்ள வேண்டும். இந்தியாவில் அமைச்சரவை அங்கத்தவர்கள் தமது சம்பளத்தில் ஒரு பகுதியை சுயமாக முன்வந்து கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் இலங்கையிலுள்ள அமைச்சர்கள் அனைவரும் தமது வரப்பிரசாதங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு மிகவும் மோசமான வகையில் அரச ஊழியர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். ஜனாதிபதி உள்ளிட்ட ஏனையவர்களிடமும் இந்த தவறை சரி செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். சில தினங்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். இது சுற்று நிரூப பிரச்சினையல்ல. சுற்று நிரூபம் மார்ச் மாதத்துக்கு உரியதாகும். ஏப்ரல் மாதத்திலும் இதைக் காரணமாகக் கூற முடியாது. எனவே மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.