பாதிக்கப்பட்டவர்களிற்கான பணத்துடன் சென்ற கிராம சேவகர்+சமுர்த்தி உத்தியோகத்திரிடம் கொள்ளையிட முயற்சி

breaking
சிறிலங்கா, கிரிவுல்ல - மரதகொல்ல பகுதியில் உள்ள சமூர்த்தியாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எடுத்து சென்ற பணத்தை கொள்ளையிட முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிவுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரத கொல்ல பகுதியில் இன்று வியாழக்கிழமை சமூர்த்தி அதிகாரி மற்றும் கிராமசேவகரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட முற்பட்டபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காலப்பகுதியில் மக்களின் அத்தியவசிய தேவைகளை கருத்திற் கொண்டு, சமூர்த்தி தாரிகள் மற்றும் வயோதிபர்களுக்காக நிதி வழங்கும் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது சமூர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராமசேவகர்கள் இந்த செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதற்கமையவே இன்று மரதகொல்ல பகுதியிலும் சமூர்த்தி அதிகாரி ஒருவரும், கிராம சேவகரும் இந்த நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக சென்றுள்ளனர். இதன்போது இலக்கதகடு அற்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் இந்த பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளதுடன், பின்னர் கிராமசேவகரும், சமூர்த்தி அதிகாரியும் அந்த பணத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்துச் சென்றுள்ளனர். இதன்போதே பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் அலவ்வ பகுதியைச் சேர்ந்த 21 வயதுக்கு  இடைப்பட்டவர்களாவர். அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிவுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.