தென் தமிழீழத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடைய 43 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை!

breaking
தென்  தமிழீழம் , அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவருடன் பழகிய 43 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். குறித்த 43 பேரையும் மட்டக்களப்பு-பொலன்னறுவை எல்லைப் பகுதியில் உள்ள வெலிக்கந்தை கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு  நேற்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையில், “கொரோனா தொற்றுக்குள்ளானவர் வெளிநாடு ஒன்றில் இருந்து மதக் கடமைகளை முடித்த பின்னர் கடந்த 16ஆம் திகதி இலங்கைக்கு திரும்பியிருந்தார். இந்நிலையில் இவருடன் சேர்த்து 5 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டதில் குறித்த நபருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அவருடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்த 20 பேரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். மேலும், தொற்றுக்குள்ளானவரின் குடும்பத்தினருடன் தொடர்புடைய சாரதி மற்றும் அவரின் உறவினர்கள் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இன்று ஆய்வுகூட பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவருடன் இரண்டாம் நிலையில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் 43 பேர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்துவது அல்லது தடுப்பு நிலையங்களுக்கு அனுப்புவது குறித்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிக்கிறோம். இதேவேளை, நாங்கள் பொறுப்பு மிக்கவர்களாகவும் சட்டம், சுகாதார நடைமுறைகளை மதித்து அவற்றுக்கு கட்டுப்பட்டவர்களாக அரசாங்கம் மற்றும் மருத்துவத் துறையினரின் அறிவுறுத்தல்களை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்காக உழைக்க வேண்டும். நாங்கள் அமைதியாக இந்த விடயங்களைக் கையாளவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.