உரக்க சொல்வோம் எங்கள் உரிமையை! உறுதியாய் கேட்போம் எங்கள் உரித்தை!! - - கீதன் இளையதம்பி

breaking
நேற்றுவரை நேர்வழி நின்று
தோற்றுப்போன நிலைதனை கண்டு
காற்றுப்போல பக்கம் மாறும்
சேற்றுப்பிழைப்பு சிறப்போ கண்டாய்?
தோற்றது எம் போராட்டமன்று
உலகத்தின் தர்மம் அல்லோ
வீழ்ந்தது தமிழ் வீரமன்று
வெல்லாரின் சதிகள் அன்றோ?
வேற்றுவர் வந்து ஈழம் ஆள
போற்றுவர் வீரம் போனதே என்று
தூற்றுவர் அல்லோ தூசாய் எண்ணி
நேற்றவர் இருந்தால் நடந்திருக்குமோ?
சேர்ந்து வாழுதல் சிறப்பே
ஊர்கடந்து போதலும் உவப்பே
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என்றவர் நாங்கள் எனவென்றவர் அன்றோ?
எங்களை இன்னும் சமமாய் அல்ல
எங்களின் நிலங்கள் எமக்காய் இல்லை
எந்தக்கொடியும் ஏற்றிப்பாடவும்
எங்களுக் கெப்படி களிப்பாய் போகும்?
பொங்குதமிழாய் புறப்பட்ட நாங்கள்
இன்னும் விடுதலை இல்லாத நாளில்
எழுகதமிழ் என ஏற்றி நிற்கின்றோம்
இழந்த நிலத்தை எடுப்பது எப்போ?
எந்தன் நாடு இதுவென்று சொல்ல
எவனுக்கும் பெருமை இயல்பாய் வரட்டும்
சிறிலங்கா என்று சொல்லும்போதே
சினமாய் போகுதே ஏற்புதல் முறையோ?
கண்டி நடனம் காண்பது இனிது
கலையின் வடிவம் அதனிலும் அழகு
உங்கள் மண்ணின் வரங்கள் அனைத்தும்
எங்கள் மண்ணில் விதைப்பதே வெறுப்பு!
எல்லாம் சமம் எல்லாம் சமம்
சொல்லுவதாலே சமத்துவம் வராது
இல்லாதவனை ஏறிமிதித்து உங்கள்
படைகளை குவித்தல் தகுமோ?
கொத்துக் குண்டால் கொன்று போட்டதை
எரியும் பொசுபரஸ் எறிகணை ஏவியே
எங்களின் உயிர்கள் இல்லாமல் போனதை
எப்படி மறப்பது எப்படி மறைப்பது?
பத்து வீதமாய் இருந்த எம் மக்களை
பத்து மடங்காய் வந்து அழித்தனை
எத்தனை நாடுகள் இணைந்து நின்றன
அத்தனை மகிழ்ச்சியோ எங்கள் அழிவிலே?
எல்லாம் மறந்து இணைந்து வாழவே
நீதி கேட்டு நிமிர்ந்து நிற்கிறோம்
எங்கள் நிலத்தை எமக்கே விடுங்கள்
உங்கள் படைகள் இங்கே வேண்டாம்
எங்கள் நாடு இதுவென்று சொல்லவே
புல்லரிக்குமே புதுப்பலம் ஏறுமே
அப்படி நிலையை அடையா வரைக்கும்
எத்தனை ஒட்டும் பயனே இலையே
சிங்கள தேசமாய் ஒன்று இருந்தால்
தமிழர் தேசமும் அமைதல் முறையே
எங்கள் நாட்டை இணைந்து அமைத்தால்
நீங்கள் நாங்கள் ஒன்றாய் இருக்கலாம்
உரிமை வேண்டும் சமமாய் வாழ
சோரம் போகா சுதந்திரம் வேண்டும்
வெறுமை இல்லா விடிதல் வாழ்வே
பெருமை வாழ்வை பெற்று தரும்
உங்கள் இடத்தில் நீங்கள் வாழவும்
எங்கள் இடத்தில் நாங்கள் ஆளவும்
கேட்டுப் பெற்றிட சலுகை அல்ல
உயிர்கள் கொடுத்த உரிமை அதுவே!
உரக்க சொல்வோம் எங்கள் உரிமையை!
உறுதியாய் கேட்போம் எங்கள் உரித்தை!!
- கீதன் இளையதம்பி -