மட்டக்களப்பு மக்களுக்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பின் நிதியினூடாக உதவி!

breaking
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பின் நிதி உதவியுடன் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முறுத்தானை மினுமினுத்தவெளி கிராமத்தில் உள்ள வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக இரண்டாம் கட்ட நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் முன்னெடுத்து வருகிறது. இதன் இரண்டாம் கட்டமாக மினுமினுத்தவெளி கிராமத்தில் வசித்து வரும் 47 குடும்பங்களுக்கான 1200 ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. உதவி வழங்கும் நிகழ்வில் கிரான் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் செ.நிலாந்தன்,பொருளாளர் பு.சசிகரன் மற்றும் ஊடகவியலாளர்களான கு.சுபோஜன், ந.நித்தியானந்தன், சு.குணலிங்கம், வாசம் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், கிராம சேவையாளர் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர். உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் நிதி உதவி வழங்கிய வல்வை 21 நண்பர்கள் அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.