நெற் கதிர்களை அழிக்க படையெடுத்துள்ள புதிய வகை குருவி இனங்கள்!

breaking
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்களில் காணப்படும் நெற் கதிர் விளைச்சல்களை ஒரு வகை புது குருவி இனங்கள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களினுள் வந்து நெற்கதிர்களை துவம்சம் செய்து விட்டு செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். " தெனையான் " என்று அழைக்கப்படும் ஒரு வகை குருவி இனங்களே இவ்வாறு விவசாய நெல் இனங்களை அழித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். கிண்ணியா பகுதியில் உள்ள பனிச்சங் குளம், மனியரசன் குளம், வெள்ளங் குளம், நடுஊற்று குளம், குரங்கு பாஞ்சான் குளம், துவரங்குளம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களில் செய்கை பண்ணப்படும் விவசாய நிலங்களை அழித்து வருவதாகவும், கூட்டம் கூட்டமாக சுமார் 5000 க்கும் மேற்பட்ட குருவிகள் ஒரே தடவையில் பறந்து வந்திறங்கி பரவலாக வயல் நெல் கதிர்களை நாசமாக்கி விட்டு செல்வதாக தெரிவிக்கின்றனர். இதனை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது சிறுபோக செய்கையை நம்பியும் மழை காலநீரினை நம்பியூம் செய்யப்படும் விவசாயம் முழுமையாக அழிவடைந்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறித்த பனிச்சங்குள பகுதியில் மாத்திரம் அண்ணளவாக செய்கை பண்ணப்பட்ட சுமார் 110 ஏக்கரில் சுமாராக 25 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த குருவி வகை கூட்டமானது காலை 5.30 மணி தொடக்கம் 10.00 மணி வரையிலான நேரங்களிலும், மாலை 3.30 மணி தொடக்கம் 06.00 மணி வரையிலான நேரங்களிலும் பல ஆயிரக்கணக்கான குருவிகள் வயல்களை அழிக்கின்றன. உயரிய சத்தம் கூச்சலிடுவதனால் குருவிக் கூட்டம் பறந்து சென்றாலும் மீண்டும் வயல் நிலங்களை நோக்கி மறு திசைக்கு சென்று இறங்குகின்றன. ஊது குழல் சத்தம் மூலமாக காவல் காக்க வேண்டிய நிலை பகல் நேரங்களிலும் நிர்ப்பந்திக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கும் அதே வேளை சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக குருவிகளின் தொல்லை இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் இது தொடர்பில் அரச திணைக்களங்கள் இதனை கட்டுப்படுத்தவோ இது தொடர்பில் ஆராய்வில் ஈடுபடவோ முன்வரவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். நாட்டில் ஏனைய சில மாவட்டங்களில் புதிய வகை வெட்டுக் கிளி வகை காணப்படுவதனால், இவ்வாறான குருவி இனங்களும் வருகை தருவது வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அங்கலாய்க்கின்றனர். எனவே நிரந்தரமான தீர்வினை தங்களுக்கு சாதகமாக்கி தருமாறும் அழிவடைந்த விவசாய நிலங்களுக்கு நஷ்ட ஈடுகளையும் வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.