வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
சர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம் "எமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து" போன்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உறவுகளுக்கான நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும், சுமந்திரன் ஸ்ரீதரனை எதிர்க்கின்றோம், வடகிழக்கில் தமிழருக்கு எதிராக நடத்தப்படும் இராணுவ கெடுபிடிகளை உடன் நிறுத்து, இலங்கையில் போர்க் குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள், எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல், வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கே, சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய் என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் சுமந்திரன், சிறிதரனை எதிரக்கிறோம் என்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இவ் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு கண்ணீர் மல்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.