கொரோனாவின் கொடூரத்தால் மனவளம் குன்றிய மகனைப் பிரிந்து சென்ற தாய் தந்தை

breaking
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கே. வி. பி கார்டனில் வசித்து வந்தவர் ஏ. கே. அருணாச்சலம் (வயது 62). இவருடைய மனைவி பெயர் கீதா (வயது 58) இவர்கள் ஒரே மகன் மணி (வயது 26) மனவளர்ச்சி குன்றியவர். சென்னையில் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கே. வி. பி. கார்டனும் அடங்கும். கடந்த சில வாரங்களாக இப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலயில் சமூக ஆர்வலரான புலவர் அருணாச்சலம் கண் பார்வை குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால் தம் அறிவுக் கூர்மையால் நிர்வாக ஆற்றலால் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநிலத் தலைவராக(STATE PRESIDENT, ALL INDIA BLIND PROGRESSIVE ASSOCIATION) பணியாற்றி வந்தார். இந்த ஊரடங்கு காலத்தில் கூட பார்வையற்றவர்கள் உணவுக்கு தவித்துக்கொண்டிருக்கும் தகவல் கிடைத்தால் தம் வயதைப் பொருட்படுத்தாமல் அங்கு போய் உதவி வந்தார். இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இவரைத் தொடர்ந்து இவர் மனைவி கீதா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகன் மணி ஆகியோரும் தொற்றுக்கு ஆளாயினர். மூவரும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனைவி கீதா நேற்று இரவும் புலவர் அருணாச்சலம் இன்று காலையிலும் பலியாயினர். அவர்களது மணி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். சுயமாக இயங்க இயலாத வாலிப மகனை பெற்றோர் இருவரும் கண்ணை இமை காப்பதுபோல் காப்பாற்றி வந்தனர். கொடிய கொரோனா அவரது பெற்றோர்கள் இருவரும் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.