கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடகொரியாவில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்று செய்தி வெளியானது. ஆனால், அதை எல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில், அந்நாட்டின் உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு திடீரென்று வருமை தந்த கிம் ஜாங், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது மீண்டும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னைப் பற்றி வதந்திகள் துவங்கியுள்ளது. ஏனெனில் கிம் ஜாங் உன் கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 7 வது மத்திய குழுவின் 13 வது அரசியல் பணியகக் கூட்டத்தில், ஞாயிற்றுக் கிழமை இந்த மாதத்தின் 7-ஆம் தேதி காணப்பட்டார். அதன் பின், ஒரு பொது நிகழ்ச்சியில் தென்பட்டார்.இதைத் தொடர்ந்து தற்போது மூன்று வாரங்களுக்கு மேல் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றவில்லை. இதனால் அவரது ஆரோக்கியம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு சிலர் கொரோனாவில் இருந்து தப்புவதற்காகவே, கிம் விலகி இருப்பதாகவும், கிம்மிற்கு உடல் அளவில் ஏதோ பிரச்சினை இருப்பதாகவும், அதனால் அவரை முன்பு போன்று அடிக்கடி பார்க்க முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் பொது நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 20 தடவைகள் மட்டுமே இருந்தது என அரசு நடத்தும் ஊடகங்களால் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஜப்பான் கூட சமீபத்தில், கிம் ஜாங் உன்னின் உடல் நிலையில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சமீபத்திய இயக்கங்கள் அனைத்து விசித்திரமானவையாக உள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.