இந்தியாவில் நாடகத் தொடர்களில் நடிக்கும் பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி

breaking
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலே வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது என்பதால் சினிமா படப்பிடிப்புகள் நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் குறைந்த நபர்களைக் கொண்டு சீரியல் படப்பிடிப்பை நடத்த இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அனுமதி அளித்தன. இந்நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், “இந்த நேரத்தில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சக நடிகர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். படப்பிடிப்பு செய்வதற்கு எங்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. ஆனாலும் இந்த துறையில் போட்டி அதிகம் என்பதால் படப்பிடிப்பு நடந்தது. நான் இந்த துறையை நம்பித்தான் இருக்கிறேன். அதனால் என்னால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என்று கூற முடியாது. நான் நோயைப் பரப்புவதற்காக இப்படி செய்வதாக வதந்தி பரப்புகின்றனர். நான் படப்பிடிப்பில் இருக்கும்போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.