கருணாவை கைது செய்யுங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு

breaking
  விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணாவை உடனடியாகக் கைது செய்வதற்கு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி எழுத்தாணை மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடுவலை நகர சபையின் உறுப்பினர் போசெத் கலஹேபத்திரண குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஓர் இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவ உறுப்பினர்களைக் கொன்ற தாம், COVID-19 தொற்றை விட குரூரமானவர் என கருணா வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஜலித் விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக கருணாவும், சட்ட மா அதிபரும், பதில் பொலிஸ் மா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட அந்தக் கருத்தின் மூலம் அவர் சமூகக் கொலைக்குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தக் கருத்தை ஒப்புதல் வாக்குமூலமாகக் கருத்தி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றுகள் கட்டளைச் சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டம், பயங்கரவாத ஒழிப்பு சட்டம் , சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போசெத் கலஹெபத்திரண மேன்முறையீட்டு நீதிமன்றிடம் கோரியுள்ளார்.