ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த பிரதேசத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இராணுவ அதிகாரி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து வீட்டுக்கு சென்ற பின்னர், அங்கு நடந்த மரணச் சடங்கு மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். இதன் காரணமாக குறித்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்துகொண்ட 230க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை இந்த இராணுவ அதிகாரியின் 11 வயதான மகன் கடந்த சில தினங்கள் பகுதி நேர வகுப்புகளும் சென்று வந்துள்ளார். இந்த பகுதி நேர வகுப்புகளில் கலந்துக்கொண்ட 70 மாணவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இராணுவ அதிகாரி, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து வீட்டுக்கு செல்லும் முன்னர், அனுராதபுரம் திஸாவெவ பிரதேசத்தில் உள்ள தனது இராணுவ முகாமுக்கு சென்றுள்ள போதிலும் முகாமுக்குள் செல்லவில்லை என இராணுவ தளபதி கூறியுள்ளார். இதனால், இராணுவ முகாமில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.