வீதியில் குப்பைகளை கொட்டும் விசமிகள்

breaking
யாழ். திருநெல்வேலி கலைவாணி மில் வீதியில் இரவோடிரவாக விஷமிகள் கழிவுகள், குப்பைகள் போன்றவற்றைக் கொண்டு சென்று வீசி விட்டுச் செல்வதால் குறித்த வீதியூடாகப் பயணிக்கும் பல்வேறு தரப்பினரும், அப்பகுதிக் குடியிருப்பாளர்களும், தோட்டச் செய்கையாளர்களும் பெரும் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த வீதி பலாலி பிரதான வீதியுடன் இணையும் முக்கியமான குறுக்கு வீதியாகவும், கொக்குவில் பொற்பதி வீதி உள்ளிட்ட மூன்று வீதிகளுடன் சென்று இணையும் வீதியாகவும் காணப்படுகிறது.இந்த நிலையில் மேற்படி வீதியால் தினம் தோறும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த பல வருடங்களாக குறித்த வீதியிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் வேறிடங்களிருந்து வரும் விஷமிகள் கழிவுகள், குப்பைகளை வீசிச் செல்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. கோழிச் செட்டைகள், சாராயப் போத்தல்கள், பிளாஸ்ரிக் போத்தல்கள், பொலித்தீன்கள், பழுதடைந்த உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் இவ்வாறு வீசிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நேற்றிரவு மேற்படி வீதியின் நடுவிலும் கழிவுகள், குப்பைகள் விஷமிகளால் வீசிச் சொல்லப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறித்த வீதியால் பயணித்த வாகனச் சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதனால் தாம் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அப்பகுதியால் பயணித்த பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். இவ்வாறு வீசப்பட்ட பொருட்களில் முகக் கவசமும் காணப்பட்டது. இந்நிலையில் குறித்த முகக் கவசம் கொரோனா நோய் அறிகுறியுள்ள ஒருவர் அணிந்திருந்தால் அதனால் தமக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பிலும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வீதியில் வீசப்பட்டுள்ள கழிவுப் பொருட்களிலிருந்து வீசும் துர்நாற்றத்தை சகிக்க முடியவில்லை எனவும் தெரிவித்த அவர்கள் இதனால் ஏற்படக் கூடிய சுகாதார ரீதியான பாதிப்புக்கள் தொடர்பிலும் மிகுந்த அச்சம் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த வீதி நல்லூர் பிரதேச சபையின் ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் விஜயனின் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த வீதியாகவும் காணப்படும் நிலையில் இந்த வீதியில் இரவோடிரவாக இடம்பெறும் அநாகரிக செயல் குறித்துக் குறித்த பிரதேச சபை உறுப்பினரோ அல்லது நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரோ, நிர்வாகமோ கவனம் செலுத்தாமை தொடர்பிலும் பொதுமக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். நல்லூர் பிரதேச சபை குறித்த செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் தூங்குகின்றதா? எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.